×

அதிமுக கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு : ஓ.பன்னீர்செல்வம் பதில் தர நோட்டீஸ்

சென்னை:அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஓபிஸ் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என்று செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது செயலாளர் என்று தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவித்து வருகிறது.

எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார். இந்த மனு இன்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்சி சின்னம், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார். கட்சி உறுப்பினர் என அவர் கூறி வருவதுடன் கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட கட்சி விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

எனவே, அவர் கட்சியின் கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அதிமுக கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு : ஓ.பன்னீர்செல்வம் பதில் தர நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : O.P. ,Bannerselvam ,Chennai ,Anna ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...