×

அதிமுக கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்துக்கும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என்று செயல்பட்டு வருகிறார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பொதுச் செயலாளர் என்று தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என்று ஒ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவித்து வருகிறது. எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

The post அதிமுக கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : EPS ,AIADMK ,OPS ,ICourt ,Chennai ,Madras High Court ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...