
சென்னை: ‘‘புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 7 நாட்களில் இணைப்பு வழங்கப்படவில்லை என்றால் இழப்பீடு வழங்கப்படும்’’ என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மே மாதத்தில் மின்சார விநியோக சட்டத்தில் திருத்தம் செய்ய வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் புதிய மின் இணைப்பு கோரிய 7 நாட்களில் மின் இணைப்பை வழங்காவிட்டால் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:புதிய மின் இணைப்புகளுக்கு தற்போது உள்ள நடைமுறைப்படி விண்ணப்பித்த நாளில் இருந்து அதிகபட்சம் 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் விண்ணப்பங்கள் சரிபார்ப்பின் போது உரிய தகவல்கள் இல்லாதபோது அதை சரி செய்ய 7 நாட்கள் வரை கால அவகாசம் எடுக்கிறது. இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நுகர்வோருக்கு விரைவில் மின் இணைப்புகளை வழங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி மின் இணைப்பை பொருத்துவதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகளும், விண்ணப்பம் சரியாக இருந்தால் அதிகபட்சம் ஒருவாரத்தில் இணைப்பு வழங்கப்படும். ஒருவேளை அதற்கு மேல் தாமதமானால் அடுத்த 10 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த 10 நாட்களுக்குள் மின்வாரிய அதிகாரிகள் கண்டிப்பாக மின் இணைப்பு வழங்கப்படும். மேலும் புதிய மின் இணைப்பை வழங்க பகிர்மான அலகுகள் இல்லையென்றாலும் அதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். புதிய துணை மின்நிலையத்தில் இருந்து கொண்டு வர வேண்டுமென்றாலும் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இழப்பீடு வழங்கப்படும் 10 நாட்களை தாண்டி இணைப்பு வழங்குவது தாமதிக்கப்படாது. மேலும் புதிய இணைப்பிற்கான விண்ணப்பத்தில் ஏதேனும் தகவல்கள் பூர்த்தி செய்யவில்லை, போதிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால் அது குறித்து விண்ணப்பித்தவருக்கு மூன்று நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
The post விண்ணப்பித்த 7 நாட்களில் மின் இணைப்பு வழங்காவிட்டால் இழப்பீடு: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.