×

சென்னையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை: தரமற்ற கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை

சென்னை: சென்னையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தரமற்ற பொருட்களை விற்ற கடைகளுக்கு சீல் வைத்தனர். நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி உயிரிழந்தது மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 43 பேர் உடல்நலன் பாதிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே பரபரப்பாக்கி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து உணவகங்களில் தரமற்ற ஷவர்மா உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சென்னையில் ஷவர்மா உணவு மிகவும் பிரபலம் என்பதால் தெருவுக்கு தெரு ஷவர்மா கடைகள் முளைத்துள்ளன. குறிப்பாக சென்னை புரசைவாக்கம், எழும்பூர், புதுப்பேட்டை, பெரியமேடு, சென்ட்ரல் பகுதிகளில் நிறைய ஷவர்மா கடைகள் உள்ளன. இந்தநிலையில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளடங்கிய குழுவினர் இந்த பகுதிகளில் நேற்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். ஷவர்மாவில் உள்ள கோழிக்கறி பதப்படுத்தி பயன்படுத்தப்படுகிறதா, நிறமூட்டி சேர்க்கப்பட்டு இருக்கிறதா, உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தரமற்ற சவர்மா தயாரித்த 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். அதேபோல சமையல் கூடங்களும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

* ரூ.2 ஆயிரம் அபராதம்
அரும்பாக்கத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 2கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் வழங்கி ரூ.2,000 அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோ எடையுள்ள தரமற்ற நிலையில் இருந்த அரிசி, சிக்கன், வெங்காயம் ஆகிய உணவு பொருட்களின் மீது கிருமி நாசினி கொண்டு அழிக்கப்பட்டது.

The post சென்னையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை: தரமற்ற கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...