×

தேர்தல் நேர வர்ணஜாலம்!: மோடி அரசின் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏமாற்று வேலை..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!

சென்னை: மோடி அரசின் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏமாற்று வேலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

“சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையில் 100-ல் 1 விழுக்காடு கூட மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு காண்பிக்காதது ஏன்?”

“பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்!”

“மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற உத்தரவாதம் இல்லை; நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029-இல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம் நிறைவேற்றும் விசித்திர தந்திரம் – எல்லாம் தோல்வி பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாய்மாலம்!”

“தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து – சூழ்ச்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்; தமிழ்நாட்டை வஞ்சிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை ஒன்றிய அரசு இப்போதே தர வேண்டும்!”

“பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை பா.ஜ.க. அரசு பரிசீலிக்க வேண்டும்!”

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு வந்திருப்பார்கள்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் போன்றவற்றைக் கடும் எதிர்ப்புக்கு இடையில் அவசர கதியில் பிடிவாதமாக நிறைவேற்றிய பா.ஜ.க. அரசு – அவற்றுக்காகக் காட்டிய அவசரத்தையோ முனைப்பையோ, எல்லோரும் வரவேற்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற கடந்த 9 ஆண்டுகாலமாகக் காட்டவில்லை. இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பா.ஜ.க.வினரை வாட்டி வரும் நிலையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி – ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக் கொள்கிறார்கள்.

2016-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி மகளிர் நாள் அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை – மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்து பெண் எம்.பி.கள் அனைவரும் சேர்ந்து இதற்காக குரல் கொடுத்தார்கள். ’33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ன ஆனது?’ என்று கேட்டார்கள். அப்போது பா.ஜ.க. அரசு வாய் திறக்கவில்லை. வாய் திறக்க ஏழு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. பெண்கள் சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறையில் இந்த மசோதாவைக் கொண்டு வரவில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?

சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள் ஆகும். சாதி வேறுபாடுகள் அற்ற சமத்துவத்தை உருவாக்கவே சமூகநீதிக் கோட்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்ணுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவது ஆகும். அதற்கு முதலில் அவர்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும். இதையே தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அமையும் போதெல்லாம் செயல்படுத்திக் காட்டியும் வருகிறது.

* பெண்களுக்குச் சொத்தில் சம உரிமமைச் சட்டம்.
* பெண் காவலர்கள் நியமனம்
*அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடஒதுக்கீடு.
* உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு.
* பெண்கள் தம் சொந்தக் காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தது.
* ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி வரை இலவசக் கல்வியும் வழங்கப்பட்டது.
* ஒன்று முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்த அரசு திமுக அரசு.
* கிராமப்புறப் பெண்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தது கழக அரசு.
* மகளிருக்குப் பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம்.
* மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை – ஆகிய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியது தி.மு.க. அரசு.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1996-ஆம் ஆண்டு வழங்கினார்கள். ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 1990-ஆம் ஆண்டு இறுதியில் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பின்னர், கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் நடைபெற்ற ஐந்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த அந்த ஆட்சியினர் முன்வரவே இல்லை.

1996ம் ஆண்டு, தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 6-இல், “அடுத்து அமைக்கப்படும் தி.மு.க அரசு, புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று உறுதி கூறுவதோடு, அது வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல், நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அவ்வாறு அறிவித்ததற்கிணங்க 96-ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் முக்கியமானது என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டதுதான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.

மொத்தம் 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 என்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 35 என்றும் – மாவட்டப் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மொத்தம் 28-இல் பெண்களுக்கு 10 என்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்க்கு 4 என்றும் – மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649-இல் பெண்களுக்கு 242 என்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்க்கு 97 என்றும் – நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 106-இல் பெண்களுக்கு 35 என்றும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்க்கு 6 என்றும் இப்படியே ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ற அளவிற்குத் தொகுதிகள் பிரிக்கப்பட்டன.

அதுதான் இன்று 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இவ்வளவு பெண்கள் அதிகாரம் பொருந்திய இடங்களுக்கு வந்து, தங்களது நிர்வாகத் திறனை மெய்ப்பித்துக் காட்டி வருகிறார்கள். இதையே நாடாளுமன்ற, சட்டமன்றங்களும் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. சுமார் 27 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் உள்ளது. 1996-ஆம் ஆண்டு தி.மு.க அங்கம் வகித்த ஒன்றிய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டது.

2005-ஆம் ஆண்டும் திமுக இடம்பெற்ற ஒன்றிய அரசு இதனைத் தாக்கல் செய்தது. முதலில் ஆதரிப்பதாகச் சொன்ன பா.ஜ.க எதிர்த்தது. பா.ஜ.க பெண் உறுப்பினரான உமா பாரதியே இதனைக் கடுமையாக எதிர்த்தார். கடந்த காலத்தில் இதை எதிர்த்தவர்களில் தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முக்கியமானவர். காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் முயற்சியின் விளைவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2010-ஆம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் சில கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு அந்த மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டது. 2014-ஆம் ஆண்டும், 2019-ஆம் ஆண்டும் நடந்த தேர்தல்களில் பெரும்பானையைப் பெற்றது பா.ஜ.க அரசு. நினைத்திருந்தால் அவர்கள் அதனை உடனடியாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 2017ம் ஆண்டு தி.மு.க சார்பில் மகளிரணிச் செயலாளரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் டெல்லியில் பேரணி நடத்தினோம்.

33 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது. மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நடந்த தி.மு.க. எம்.பி.கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 9 ஆண்டுகளாக அதிக பெரும்பான்மை உள்ள பா.ஜ.க. அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022-இன் படி 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 48-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மூலமாக இதனைச் சரி செய்ய முடியும். அந்த வகையில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தார். நாடாளுமன்ற – சட்டமன்றங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெற்றி பெற வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

இவர்கள் இருவரது சாதனைகளும் இப்போது நினைவு கூரப்பட வேண்டியவை ஆகும். காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புகாகச் செய்தாலும், இப்போதைய பிரச்சினைகள் அனைத்தையும் திசைதிருப்பச் செய்தாலும், ஒன்றிய அரசு கொண்டு வரும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன். பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளாமல், அதன் நியாயத்தை பரிசீலிக்குமாறு ஒன்றிய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இன்னும் நடத்தாத ஒரே நாடு இந்தியா. எப்போது நடைபெறும் என்ற உத்தரவாதத்தையும் இதுவரை பா.ஜ.க. அரசு தரவில்லை. எப்போது நடைபெறும் என்று தெரியாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையில் நடக்கவுள்ள தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு இப்போது சட்டம் இயற்றும் விசித்திரம் பா.ஜ.க.வால் அரங்கேற்றப்படுகிறது.

தமிழ்நாட்டின் மீது – தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தேர்தல் நேர வர்ணஜாலம்!: மோடி அரசின் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏமாற்று வேலை..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM G.K. Stalin ,Chennai ,M.D. ,Modi government ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...