
காஞ்சிபுரம், செப்.20: காஞ்சிபுரத்தில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு ₹70.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒருநாள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களின் முன்னிலை வகித்தனர். அப்போது, மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.
இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், 228 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரிசெய்ய வேண்டும். மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின்னழுத்த திறன் கொண்டு இருப்பதை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், நமக்கு தெரியாத சில பிரச்னைகள் மற்றும் மக்களின் தேவைகளை இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ₹75 ஆயிரம் மதிப்பிலான 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு நவீன செயற்கை கால், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹69.60 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், 10 பயனாளிக்கு ₹60 ஆயிரம் மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில், ₹332.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள 76 பழங்குடியினர் குடியிருப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டார். அப்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post காஞ்சியில் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ₹70.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.