திருப்போரூர், செப்.20: கோவளம் கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்க உள்ள இடத்தினை, கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் வருகிற 24ம் தேதி முதல் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. தாம்பரம் காவல் ஆணையத்தின் எல்லைக்கு உட்பட்ட கோவளம் கடற்கரை பகுதியிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை ஆய்வு செய்து முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் நேற்று கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஆய்வு செய்தனர். சிலைகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வரும் வழி, சிலைகளை இறக்கி விட்டு வாகனங்கள் வெளியே செல்லும் வழி, சிலைகளை கிரேன் இயந்திரம் மூலம் தூக்கிச் செல்ல ஒதுக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
பின்னர், கலெக்டர் ராகுல்நாத் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித பிரச்னைகளும் இன்றி சுமுகமாக முடிந்துள்ளது. அதேபோன்று, விநாயகர் சிலைகளை கரைக்க 24ம் தேதி தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி எடுத்து வந்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளித்து அவர்களின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மதித்து சிலைகளை கரைக்க வேண்டும்.
இதற்கு தேவையான காவல் துறை பாதுகாப்பு போட உள்ளோம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படாது. ஆகவே, பொதுமக்களும், அமைப்புகளும் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு அளித்து அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களின் வழியே மட்டும் ஊர்வலமாக வந்து சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி, துணை ஆணையர் (போக்குவரத்து) குமார், கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமரன், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கும் இடத்தினை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.