×

பொய்கை மாட்டு சந்தையில் ₹80 லட்சம் வர்த்தகம் கால்நடைகளின் வரத்து குறைவு

வேலூர், செப்.20: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று வர்த்தகம் சுமாராக நடந்த நிலையில் ₹80 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த வாரத்தை விட நேற்று கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் மற்றும் அடிமாடுகளும் விற்பனைக்கு வந்தது. ஆனால் புரட்டாசி மாதம் என்பதாலும் கால்நடைகள் வரத்து குறைவாலும் கால்நடை வர்த்தகம் நேற்று சுமார் ₹80 லட்சத்துக்கு நடந்ததாகவும், வந்த கால்நடைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சுமாரான விற்பனைதான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொய்கை மாட்டு சந்தையில் ₹80 லட்சம் வர்த்தகம் கால்நடைகளின் வரத்து குறைவு appeared first on Dinakaran.

Tags : Poigai cattle market ,Vellore ,Poikai Cattle Market ,Dinakaran ,
× RELATED பொய்கை மாட்டு சந்தையில் ₹1.50 கோடி வர்த்தகம்