சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. எனவே, நடிகர் விஷால் வரும் 22ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோர்ட்டில் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என்று தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது அவரிடம், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான நான்கு வங்கிக் கணக்கு விவரங்களையும், அவரின் அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன ஆகியவற்றை சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. மேலும், 4 வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்தின் விவரங்களின் ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. எனவே, நடிகர் விஷால் வரும் 22ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் பிற்பகலில் நடிகர் விஷால் தரப்பு வழக்கறிஞர், விஷால் நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நடிகர் விஷால் வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
The post திரைப்பட தயாரிப்புக்காக கடன் பெற்ற விவகாரம் நடிகர் விஷால் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

