
பெங்களூரு: சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இன்றைய தலைமுறை மாணவர்களும், இளைஞர்களும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். இந்நிலையில், தேசவிரோத டிவிட்டர் பதிவுகளை நீக்குமாறு டிவிட்டர் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டதை எதிர்த்து அந்நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்றம் சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கருத்து கூறியது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.நரேந்தர் மற்றும் விஜயகுமார் பாட்டீல் அடங்கிய அமர்வு, சமூக வலைதளங்களை தடை செய்வது நல்லது.
அதன்மூலம் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி மாணவ மாணவியர்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். குறைந்தபட்சம், சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது நிர்ணயமாவது செய்ய வேண்டும். 17-18 வயதில் தான் நல்லது, கெட்டதுகளை ஆராயக்கூடிய தன்மையும் பக்குவமும் வரும். நாட்டுக்கு எது நல்லது, நாட்டின் நலனுக்கு எதிரானது எது என்பதை மாணவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஓட்டுப்போடுவதற்கான வயதைத்தான், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான வயதாகவும் நிர்ணயிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
The post சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது நிர்ணயம் செய்யுங்கள்: ஒன்றிய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.