×

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கவிஞர் தமிழ்ஒளி 1924ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர் ஆகும். பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.தமிழ்ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு கவிஞர் தமிழ்ஒளி அவர்களுக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வருக்கு விழா குழு நன்றி: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டையொட்டி சிலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விழா குழு நன்றி தெரிவித்துள்ளது. சமதர்ம கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டில் அவரின் புகழ் நிலைக்கவும் அவரின் படைப்புகளை அனைவரும் அறிந்திட வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வருக்கு நூற்றாண்டு விழாக்குழு தனது நன்றி தெரிவித்துக் கொள்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கம்யூனிஸ்ட் பாராட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கவும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூ.50 லட்சம் வைப்பு தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தனது அறிக்கையில், ‘‘கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை அமைத்து, இளைய தலைமுறை அறிந்து கொள்ள ஊக்கமூட்டும் பரிசு திட்டங்களையும் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்’’ என கூறியுள்ளார்.

The post கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Lakshi University ,Thanjavur ,Tamil Laksha ,Light ,Chief Minister ,Tamil ,G.K. Stalin ,Chennai ,Tamil University ,Oulu ,Poet ,of ,Tamil Light ,B.C. ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...