×

பண்ருட்டியில் இன்று பாஜக நிர்வாகி ஆக்கிரமித்த ₹50 கோடி நிலம் மீட்பு: இந்து அறநிலையத்துறை அதிரடி

பண்ருட்டி: பண்ருட்டியில் பாஜக நிர்வாகி ஆக்கிரமித்த ரூ.50 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறை இடம் இன்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் அதிரடியாக மீட்கப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி பேருந்து நிலையத்தின் பின்புறம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த இடத்தை பண்ருட்டி பாஜக நகர செயலாளர் ராமச்சந்திரன் என்பவர் தனது உறவினர் பெயரில் ஆக்கிரமித்து கடைகளை கட்டி பல ஆண்டுகளாக வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.

இந்த இடத்தை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் இடத்தை காலி செய்யாமல் சம்பந்தப்பட்டவர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்த இடத்தில் பல்வேறு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். மேலும் லாரி, வாகனங்கள் நிறுத்துவதற்கும் வாடகைக்கு விட்டுள்ளனர். இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதி உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு இடத்தை கைப்பற்ற அனுமதி அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், கடலூர் உதவி ஆணையர் முத்துக்குமரன், அரியலூர் உதவி ஆணையர் நாகராஜன், பண்ருட்டி அறநிலையத்துறை செயல்அலுவலர் வேல்விழி, கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் ஆனந்தி, டிஎஸ்பி சபியுல்லா மற்றும் ஏராளமான போலீசார் அங்கு சென்றனர். பின்னர் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள நுழைவு கேட்டின் பூட்டை அதிகாரிகள் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பாஜக நகர செயலாளர் ராமச்சந்திரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைக்கார்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத அதிகாரிகள் ஷட்டர் போட்டு பூட்டு போட்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். தற்காலிக ஷெட் போட்டிருந்த கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையை பல இடங்களில் வைத்தனர். மேலும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பாஜக செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகள் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பண்ருட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கடைகளுடன் கூடிய நிலம் அதிரடியாக கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பண்ருட்டியில் இன்று பாஜக நிர்வாகி ஆக்கிரமித்த ₹50 கோடி நிலம் மீட்பு: இந்து அறநிலையத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Panruti ,Hindu Charitable Department ,Panrutti ,Hindu Charity Department ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு