
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் பல்வேறு இடங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக மழையின் தாக்கம் அதிகமாக உள்ள சூழலில் இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் சூழலில் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வரும் விதமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளின் நிலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதற்கான அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
மேலும் மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்கான தூர்வாருதல் போன்ற பணிகள் எந்தமாதிரியான கட்டத்தில் உள்ளது என்பது குறித்த ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது. அதேசமயம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு மேலாண்மை குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மேற்கொள்ளக்கூடிய சுகாதார பணிகள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.