×

காதலுக்கு உடந்தையாக இருந்த பாஜ மகளிரணி நிர்வாகி கழுத்தறுத்து படுகொலை

சேலம்: காதலுக்கு உடந்தையாக இருந்த பாஜ மகளிரணி நிர்வாகி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (45). அஸ்தம்பட்டி பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி (40), பாஜ மகளிர் அணி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர் சேலம் மாநகராட்சி தேர்தலில், 48வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு, பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். கண்ணனின் தம்பி கர்ணன் (எ) கருணாநிதி (40). இவர் அண்ணனின் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். கர்ணனின் மகள் ராஜேஸ்வரி (19), அன்னதானப்பட்டியைச் சேர்ந்த மோகன்லாலை காதலித்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி, ராஜேஸ்வரியும், மோகன்லாலும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனை ராஜேஸ்வரியின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் காதல் தம்பதி சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த வாரம் தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பு உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராஜேஸ்வரி, காதல் கணவன் மோகன்லாலுடன் செல்வதாக கூறிச்சென்றார். இந்நிலையில், தம்பதியர் நேற்று முன்தினம் இரவு, கண்ணனின் வீட்டிற்கு வந்தனர்.

இதையறிந்த கர்ணன், மகள் காதல் திருமணம் செய்ததற்கு அண்ணி சாந்தி தான் காரணம் என்று கருதி, அங்கு கோபத்துடன் வந்துள்ளார். ராஜேஸ்வரி மற்றும் சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் சாந்தியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தியை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து கர்ணனை தேடி வருகின்றனர்.

The post காதலுக்கு உடந்தையாக இருந்த பாஜ மகளிரணி நிர்வாகி கழுத்தறுத்து படுகொலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Salem ,Kannan ,Salem Annadanapatti.… ,Baja Makalirani ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...