×

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற போதை இன்ஸ்பெக்டரை தூணில் கட்டிவைத்து தர்மஅடி: அரை நிர்வாணமாக சிக்கியதால் பரபரப்பு

ஆக்ரா: ஆக்ராவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போதை போலீஸ் இன்ஸ்பெக்டரை, மக்கள் தூணில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். அவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த பர்ஹான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்தீப் குமார் என்பவர், மதுபோதையில் திஹேயா கிராமத்தில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நள்ளிரவில் நுழைந்தார்.

அந்த வீட்டில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த சிறுமியின் ஆடைகளைக் கிழித்தார். கூச்சலிட்ட சிறுமியை தாக்கினார். அதற்குள் அந்த சிறுமியின் அழுக்குரல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், இன்ஸ்பெக்டரின் பிடியில் இருந்த சிறுமியை மீட்டனர். அரை நிர்வாணமான இருந்த இன்ஸ்பெக்டரை சுற்றுவளைத்து பிடித்தனர்.

ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்ஸ்பெக்டரை வீட்டின் அருகே உள்ள தூணில் கட்டி வைத்தனர். அங்கிருந்த சிலர் இன்ஸ்பெக்டரை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்ஸ்பெக்டரை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சந்தீப் குமாரை, உடனடியாக சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் ப்ரீத்திந்தர் சிங் உத்தரவிட்டார். மேலும் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் போதையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற போதை இன்ஸ்பெக்டரை தூணில் கட்டிவைத்து தர்மஅடி: அரை நிர்வாணமாக சிக்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmafeet ,Agra ,dharma ,
× RELATED மகாராஷ்டிராவில் பேருந்தும், லாரியும்...