
திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். விநாயகரை வழிபட்டு எந்த ஒருகாரியத்தை தொடங்கினால் அந்த காரியம் நல்லபடியாக அமையும் என்பது இந்துமக்களின் நம்பிக்கையாகும். இதனால் விநாயகரை முழுமுதற்கடவுளாக இந்துமக்கள் அதிக அளவில் வழிபட்டுவருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணிமாதத்தில் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு பஞ்சாங்கப்படி புரட்டாசி முதல் நாளான விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. திருச்சியில் பிரசித்திபெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையர் கோவிலில் விநாயகர்சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அதிகாலை 5மணிக்கு நடைதிறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 50கிலோ பச்சரிசி, 50கிலோ உருண்டை வெல்லம், 2கிலோ எள், 1கிலோ ஏலக்காய் மற்றும் சாதிக்காய், 6கிலோ நெய், 100தேங்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு தலா 75 கிலோ எடையில் 150 கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு, சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்பட்டு பின்னர் விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் கொழுக்கட்டையானது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.
The post விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு appeared first on Dinakaran.