
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது; விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு இடம் பெயர்கிறோம். பழைய வருத்தங்கள், புகார்களை புறந்தள்ளி உற்சாகத்துடன் புதிய நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும்.
நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. இந்தியாவின் மூவர்ண கொடி நிலவிலும் பறக்கிறது. சில நாட்கள் மட்டுமே நடைபெற்றாலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத்தொடரை உற்சாகமாக நடத்தி அனைவரும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை தர வேண்டும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும். இந்த கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
சந்திராயன் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. ஏழை நாடுகளின் குரலை பிரதிபலித்ததில் பெருமைப்படுகிறேன். அனைத்து நிகழ்வுகளும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பாராட்டுகிறது மற்றும் இந்திய மூவர்ணக்கொடி தற்போது நிலவிலும் பறக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
The post டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு appeared first on Dinakaran.