×

அதிமுக எம்.பி தம்பிதுரை பேச்சு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் தலைமையில்தான் கூட்டணி இருக்கும்

சென்னை: தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணிகள், திராவிட இயக்கங்கள் தலைமையில் தான் இருக்கும் என அதிமுக எம்.பி தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று டெல்லியில் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அதிமுக எம்.பி தம்பிதுரை நேற்று மதியம் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரம் குறித்து, அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவில் அதிமுக இடம்பெறும். இப்போது நடக்க இருக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், முக்கியமான நிகழ்வாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணிகள், திராவிட இயக்கங்கள் தலைமையில் தான் இருக்கும். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் தான் கூட்டணி இருந்தது. எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாடுபடுவோம். அதிமுகவில் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. தேர்தலில் சுமூகமாக செயல்பட்டு வெற்றி பெற பாடுபடுவோம். அதேப்போல் பாஜ உடன் எங்களுடைய கூட்டணி சுமூகமாக இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு திரும்பி வந்திருக்கிறார். பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்துள்ளது.

The post அதிமுக எம்.பி தம்பிதுரை பேச்சு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் தலைமையில்தான் கூட்டணி இருக்கும் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thambidurai ,Dravidian ,Tamil Nadu ,Chennai ,Dravida ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...