×

மொராக்கோவை வீழ்த்தியது இந்தியா: வெற்றியுடன் விடைபெற்றார் போபண்ணா

லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக பிரிவு-2 முதல் சுற்றில் மொராக்கோ அணியுடன் மோதிய இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது. லக்னோ மினி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. மொராக்கோவின் டிலிமி யாசினுடன் மோதிய சசிகுமார் முகுந்த் 3வது செட்டில் காயம் காரணமாக விலகியதால் இந்தியா 0-1 என பின்தங்கியது. 2வது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் மொராக்கோவின் ஆடம் மவுண்டிரை வீழ்த்தினார். இந்த நிலையில், கடைசி நாளான நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – யுகி பாம்ப்ரி இணை மொராக்கோவின் எலியட் – லாலாமி ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் போபண்ணா ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று இந்தியாவுக்கு 2-1 என முன்னிலை கொடுத்தது. அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்தியாவின் சுமித் நாகல் 6-3, 6-3 என டிமிலி யாசினையும், திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மொராக்கோவின் வாலித் அஹவுதாவை வீழ்த்த, இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியுடன் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போபண்ணா, தேசியக் கொடியை ஏந்தியபடி மைதானத்தை வலம் வந்து ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றார்.

The post மொராக்கோவை வீழ்த்தியது இந்தியா: வெற்றியுடன் விடைபெற்றார் போபண்ணா appeared first on Dinakaran.

Tags : India ,Morocco ,Bopanna ,Lucknow ,Davis Cup Tennis World Division- ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!