×

போரூர் அருகே பரபரப்பு கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேரை முட்டிய மாடு மர்ம மரணம்

பல்லாவரம், செப்.16: போரூர் அருகே கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேரை முட்டிய மாடு மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், மதுரம் நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன், கட்டுமான பணியில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன் (53) என்பவரை, அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது. இதில், அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்தது. சற்று நேரத்தில் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த 31 வயது உடைய கர்ப்பிணி மற்றும் ஒரு நபர் உள்ளிட்ட 3 பேரையும் அதே மாடு முட்டி தள்ளியது.

இதில், படுகாயமடைந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு ஒரே நாளில் 3 பேரை விரட்டி விரட்டி முட்டிய மாட்டை பிடிக்கும் பணியில் அய்யப்பந்தாங்கல் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அந்த மாட்டை பிடிப்பதற்காக ஊழியர்கள் வலைவீசி தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் அந்த மாடு மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக அய்யப்பன் தாங்கல் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இறந்த மாட்டின் உடலை விரைவாக அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், இறந்து கிடந்த மாட்டை மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்து அவசர அவசரமாக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், மாட்டை எடுத்துச்சென்ற நபர்கள் யார் என்பது குறித்தும், மாட்டை அந்த பகுதியை சேர்ந்த சிலர் அடித்துக் கொன்றார்களா அல்லது உணவில் விஷம் வைத்து கொன்றார்களா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார், இறந்த மாட்டை எடுத்துச்சென்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேரை அடுத்தடுத்து முட்டி தள்ளிய மாடு திடீரென மர்மமான முறையில் இறந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post போரூர் அருகே பரபரப்பு கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேரை முட்டிய மாடு மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : Porur ,Pallavaram ,Borur ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!