×

புதுவை பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர்கள் அதிரடி கைது அரிவாளுடன் ரவுடி சிக்கினார்

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி சுற்றுலா தலங்களில் கஞ்சா புழக்கம் அதிகளவில் இருப்பதாக கிழக்கு எஸ்பி சுவாதி சிங்கிற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, எஸ்ஐ ஜாகீர்உசேன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பாண்டி மெரீனா பகுதியில் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள லைட் ஹவுஸ் காம்பவுண்ட் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் 2 பேர் நிற்பதை பார்த்த போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே இருவரையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிள்ள 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், சாரம் வினோபா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் (20), கிருமாம்பாக்கம் இளங்கோ நகர் சந்துரு (21) என்பது தெரியவந்தது.பிடிபட்ட 2 பேரிடம் இருந்து செல்போன், பைக் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி, 2 பேரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதில் வெங்கடேஷ் எலக்ட்ரீசியன், சந்துரு பெயிண்டர் வேலை செய்து வந்த நிலையில், வெங்கடேஷ் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதேபோல் மேட்டுப்பாளையத்திலும் கஞ்சா விற்ற வாலிபர் பிடிபட்டார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல் கோரிமேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட ஜீவானந்தபுரத்தில், அரிவாளுடன் வாலிபர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ஆயுதங்களுடன் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்த நாவற்குளம் வசந்தபுரத்தை சேர்ந்த ரகு (எ) மாரியப்பனை (36) போலீசார் கைது செய்தனர். ரவுடியான இவர் மீது ஜீவானந்தபுரம் சாலமோன் கொலை உள்ளிட்ட 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

The post புதுவை பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர்கள் அதிரடி கைது அரிவாளுடன் ரவுடி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,East SP ,Swathi Singh ,Dinakaran ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி