அரியலூர்,செப்.16: அரியலூர் மாவட்டத்தில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98,000க்கு மிகாமலும், நகர்ப்புறமாயின் ரூ.1,20,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டிற்கு ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான கடன் விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (அறை எண்-16) பெற்று, அதனை பூர்த்தி செய்து, சாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், உண்மை சான்றிதழ் நகல், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான், மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி திட்டத்தில் தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
The post தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் appeared first on Dinakaran.
