
சென்னை: தமிழக மீனவர்களின் எதிர்கால பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இவர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள். நேற்று முன்தினம் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் என்று 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கடந்த மாதத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு, விலையுயர்ந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது. தற்பொழு இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை என்று பிரச்சனைகள் தொடர்ந்தவாறு இருப்பது மிகுந்த வருத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக காரணங்களை சொல்லும் இலங்கை கடற்படையினர் உண்மை நிலைக்கேற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கவே மீன்பிடிக்க கடலுக்குள் செல்கிறார்கள். அவர்கள் மீது அத்துமீறி நடந்துகொள்வது மனிதாபிமானமற்ற செயல். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வுகாணும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையின் மூலம் முடிவெடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் எதிர்கால பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழக மீனவர்களின் எதிர்கால பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.