×

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை திரும்ப பெற கோரி சீமான், சாட்டை துரைமுருகன் மிரட்டுகின்றனர்: புகார் அளிக்க வந்த வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை; போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை திரும்ப பெறக்கோரி இயக்குநர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் தங்கள் ஆட்களை வைத்து மிரட்டுவதாக தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நடிகை விஜயலட்சுமிக்கும் இயக்குநர் சீமானுக்கு இடையே நடந்து வரும் பிரச்னையில், நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவன தலைவர் வீரலட்சுமி ஆதரவாக உள்ளார். இதனால், இயக்குநர் சீமான் குறித்து வீரலட்சுமி பொதுஇடங்களில் அவதூறாக பேசி வருவதாகவும், இதனால் சீமான் தரப்பினர், வீரலட்சுமியிடம் ரூ.1 கோடி மானநஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி நேற்று மதியம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இயக்குநர் சீமான் மீது புகார் அளிக்க வருவதாக, நாம் தமிழர் கட்சியினரிடையே தகவல் பரவியது. இதனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு ஒன்று கூடினார். இதனால் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வகையில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் திட்டமிட்டப்படி வீரலட்சுமி நேற்று மதியம் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

அவர் காரில் இருந்து இறங்கியதும், அங்கு கூடியிருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பியடி வீரலட்சுமியை முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வீரலட்சுமியை பத்திரமாக கமிஷனர் அலுவலகத்தின் 3வது நுழைவுவாயில் வழியாக உள்ளே அழைத்து சென்றனர். ஆனால் சீமான் கட்சியினர் போலீசாரின் தடையை மீறி உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தி நுழைவு வாயில் கதவை மூடினர். அதன் பிறகு வீரலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நடிகை விஜயலட்சுமி என்னை சந்தித்து சீமானால் பாலியல் வன்புணர்ச்சி தாக்குதலுக்கு உண்டாகி ஏமாற்றப்பட்டதாகவும், நியாயம், நீதி கேட்டு யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டார். இந்நிலையில் சாட்டை துரைமுருகன், இவரின் அண்ணன் சீமான் இருவரும் சேர்ந்து அருந்ததியினர் மக்கள் செய்யும் தொழிலையும், அவர்களின் பிறப்பையும் இழிவாக பேசினர். அது மட்டுமின்றி நாயுடு சமுகத்தினரை இழிவாக பேசினர்.

விஜயலட்சுமிக்கு உதவிய காரணத்திற்காக என்னை சாட்டை துரைமுருகன் மற்றும் அவர்களின் சகாக்கள் சாட்டை என்ற சமூக வலைத்தளம் மூலமாகவும், செல்ேபான் மூலமாகவும் பெண் என்றும் பாராமல் இழிவாக பேசி விஜயலட்சுமி, சீமான் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று எனக்கு போன் செய்து மிரட்டி வருகின்றனர். எனவே சாட்டை துரைமுருகன் மற்றும் அவரது சகாக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

The post நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை திரும்ப பெற கோரி சீமான், சாட்டை துரைமுருகன் மிரட்டுகின்றனர்: புகார் அளிக்க வந்த வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை; போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Seeman ,Duraimurugan ,Vijayalakshmi ,Naam ,Veeralakshmi ,Chennai ,Chattai Duraimurugan ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...