
சென்னை: முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி டிசிஎம் (ஆர்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, என்று சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் கடந்த 13 முதல் 22ம் தேதி வரை www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணமாக ரூ.100 இணையதளம் மூலம் செலுத்தி சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அலுவலக நாள் மற்றும் நேரத்தில் நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி ஆகும். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 17 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இரு பாலருக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீட்டின்படி சேர்க்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு பட்டயப் பயிற்சி ஓராண்டு 2 பருவ முறைகளாக (முதல் பருவம் 6 மாதம், 5 பாடங்கள் + இரண்டாம் பருவம் 6 மாதம், 5 பாடங்கள்) நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் மொத்தம் ரூ.18750 ஆகும். மேலும், விவரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண். 215 பிரகாசம் சாலை பிராட்வே, சென்னை – 600 001 என்ற முகவரியிலோ அல்லது 044-25360041 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கூடுதல் பதிவாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.