×

இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களுக்கு செப். 27 வரை சிறை: சிறுவர் இல்லத்தில் 2 பேர் ஒப்படைப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களில் 15 பேரை, செப். 27 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுவர் இல்லத்தில் 2 சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் இருந்து ேநற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றபோது 3 விசைப்படகுகளுடன், 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் மூன்று படகையும், 17 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இரவோடு இரவாக அழைத்து சென்றனர்.

மேல் நடவடிக்கைக்காக இவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாலையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 15 மீனவர்களையும் வரும் 27ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும், 16 வயதான 2 சிறுவர்களையும் அச்சுவேலி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கவும்‌ உத்தரவிட்டார். சிறுவர்களை அழைத்து சென்றால் நடவடிக்கை: ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி கூறுகையில், ‘‘விசைப்படகுகளில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை மீன்பிடிக்க அழைத்து செல்வது கண்டிக்கத்தக்கது. சட்டத்திற்கு புறம்பாக 18 வயதுக்கு குறைவானவர்களை மீன்பிடிக்க அழைத்து செல்லும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களுக்கு செப். 27 வரை சிறை: சிறுவர் இல்லத்தில் 2 பேர் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...