×

நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எதிரொலி; கோழிக்கோட்டில் பொது நிகழ்ச்சிகளுக்கு 10 நாள் தடை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 10 நாள் பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியானது கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காய்ச்சல் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட மேலும் 3 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரும் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 9 வயது சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. இந்தநிலையில் நிபா வைரஸ் பரவுவதை தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் கீதா உத்தரவிட்டு உள்ளார். அதேபோல் 10 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், வரவேற்பு, கோயில் விழாக்கள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 7 பஞ்சாயத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் மேலும் 11 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு தவிர யாரும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அவசிய தேவை இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் 20 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் அண்டை மாவட்டமான மலப்புரம் மாவட்டத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

The post நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எதிரொலி; கோழிக்கோட்டில் பொது நிகழ்ச்சிகளுக்கு 10 நாள் தடை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kozhikode, Kerala ,
× RELATED மூதாட்டியின் ஓட்டை வேறு ஒருவர் போட்டதால் 4 அதிகாரிகள் கைது