×

அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை பயிற்சி அர்ச்சகர்களாக நியமிப்பதை எதிர்த்து வழக்கு

மதுரை, செப். 14: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலதார்கள் சபா நிர்வாகிகள் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை சார்பில் ஜூலை 27ல் வெளியிட்டுள்ள அரசாணையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி பயிற்சி முடித்தவர்களை, மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டது சட்டவிரோதம். ஒரு வருட பயிற்சியில் வேதங்களை முழுமையாக கற்க முடியாது. முறையாகவும், முழுமையாகவும் கற்றிட 6 ஆண்டுகள் வரை ஆகும். மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யக்கூடியவருக்கு கோயில் நிதியிலிருந்து ரூ.8 ஆயிரம் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முறைப்படி ஆகம விதியை கற்றவர்கள் இருக்கும்போது இந்த நடைமுறை தேவையற்றது.

எனவே, அரசாணை அடிப்படையில் இணை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஏற்கனவே முறைப்படி பயிற்சி பெற்றவர்களுக்கு, அனுபவரீதியாக பயிற்சியளித்திடும் வகையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தலையிட வேண்டியதில்லை’’ என்றனர். இதையடுத்து மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை பயிற்சி அர்ச்சகர்களாக நியமிப்பதை எதிர்த்து வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,ICourt Madurai ,Thiruchendur Subramania Swamy Temple ,Independent Paripalana Sthaladars ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...