
சென்னை: மல்டிபில் பைனான்ஸ் மற்றும் முதலீடு நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள் உரிய அடையாள ஆவணங்கள், வைப்பீடு தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராகி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மல்டிபில் பைனான்ஸ் மற்றும் முதலீடு நிறுவனத்தில் டெபாசிட் செய்த டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று சென்னை, பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணன் மற்றும் செந்தில் ஆகியோர் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எழும்பூர், தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேற்படி வழக்கில் சாட்சிகளாக காண்பிக்கப்பட்டுள்ள வைப்பீடுதாரர்களுக்கான பணத்தை குற்றவாளிகள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்நீதிமன்றத்தில் வைப்பீடு ெசய்துள்ளனர்.
மேற்பட்ட மல்டிபில் பைனான்ஸ் மற்றும் முதலீடு நிறுவனத்தில் முதலீடு செய்த வைப்பீடுதாரர்களான சாட்சிகளில் பெரும்பாலானோர் பணத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுள்ளனர். வழக்கில் சாட்சிகளாக உள்ள பல நபர்கள் இன்னும் நீதிமன்றத்தில் ஆஜராகி பணத்தை பெற்றுக் கொள்ளவில்லை. எனவே மேற்சொன்ன வழக்கில் வைப்பீடு செய்த பணத்தை இதுவரை பெற்றுக் கொள்ளாத வைப்பீடுதாரர்களான சாட்சிகள் இந்நீதிமன்றத்தில் உரிய அடையாள ஆவணங்களுடனும், வைப்பீடு தொடர்பான ஆவணங்களுடனும் ஆஜராகி அவர்களுக்கு உரிய பணத்தை பெற்றுக் கொள்ள இந்த பொது அறிவிப்பு மூலம் அறிவுறுத்தப்படுகிறது என்று தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
The post மல்டிபில் பைனான்சில் முதலீடு உரிய ஆவணங்களுடன் ஆஜராகி பணத்தை பெறலாம்: குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.