×

திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற சென்னை பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த டாக்டர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நள்ளிரவில் வயிற்று வலியால் சிகிச்சைக்கு சென்ற சென்னை பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் போஸ்கோ நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயில் திருவிழாவையொட்டி பெண் டாக்டர் திருப்பத்தூருக்கு வந்தார். அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் திருப்பத்தூர் அனுமந்த உபாசாக நகரில் 24 மணி நேரம் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அப்போது அங்கிருந்த டாக்டர் தியாகராஜனிடம் (35) இதற்கு முன்பு வயிற்றுவலி ஏற்பட்டபோது தான் எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரை மற்றும் ஊசி குறித்து தெரிவித்த பெண் டாக்டர், அதே மருந்தை வழங்கும்படி கேட்டுள்ளார்.
அதற்கு, ‘பரிசோதனை செய்த பின்னரே என்ன மாதிரியான மருந்து கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்’ எனக்கூறி அங்குள்ள பரிசோதனை அறைக்கு தியாகராஜன் அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்வதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர், அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். மேலும் தனது பெற்றோரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் தட்டிக்கேட்டனர்.

அப்போது அவர்களை உதாசீனப்படுத்தி பேசியதோடு, மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்தனர். அதோடு டாக்டர் தியாகராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து உரிய விசாரணை நடத்துவதாக கூறி சமாதானப்படுத்தினர். இதுதொடர்பாக பெண் டாக்டர் நேற்று காலை திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து டாக்டர் தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற சென்னை பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த டாக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirupattur ,Tirupattur ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...