×

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை ஏற்று தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தினால் தமிழகத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட அளவின்படி தற்பொழுது 5000 கன அடி நீர் திறந்து விட முடியாது என முதல்வர் சித்தராமையா ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து ஒன்றிய அமைச்சர் ஷெகாவாத்திற்கு சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில், ‘கடந்த 1.6.2023 வரை 11.9.2023 வரை கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு அணைகளுக்கு 104.27 டிஎம்சி அளவு நீர் மட்டுமே நீர் வரத்தாக வந்துள்ளது. மேல் குறிப்பிட்டுள்ள அதே காலகட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக கர்நாடக மாநிலத்திற்கு 228 டிஎம்சி நீர் கிடைத்துள்ளது. ஆனால் இந்த வருடம் குறைவாக நீர் கிடைத்துள்ளது. இது சராசரியாக 53 சதவீதம்‌ குறைவான நீர் வரத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திற்கு நடப்பாண்டில் குடிநீர் தேவைக்கு 33 டிஎம்சி, விவசாயம் செய்ய 70.20 டிஎம்சி, இதர தேவைக்கு 3 டிஎம்சி என மொத்தமாக 106.21 டிஎம்சி நீர் தேவையாக உள்ளது. தற்பொழுது கர்நாடக மாநிலத்தில் நான்கு காவிரி அணைகளில் 53.28 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. எங்களுக்குத் தேவையான நீர் இருப்பே இல்லாத போது எவ்வாறு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியும்.இதனால் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மறு ஆய்வு செய்ய தாங்கள் உத்தரவிட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை ஏற்று தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Caviri Regulatory Committee ,Tamil Nadu ,Chief Minister ,Sitaramaiah ,Union Minister ,Bengaluru ,Karnataka ,Kaviri Regulatory Committee ,Siddaramaiah ,Union ,Minister ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...