×

ராஜஸ்தானில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலி.. 15 பேர் படுகாயம்!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் பரத்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்பூர் – ஆக்ரா நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். குஜராத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மதுராவிற்கு பேருந்து சென்று கொண்டு இருந்த போது, அதிகாலை 4.30 மணி அளவில் விபத்து ஏற்பட்டது. பரத்ப்பூர் மாவட்டத்தில் உள்ள லகான்புர் பகுதியில உள்ள அந்த்ரா பாலத்தில் பேருந்து நின்ற போது, பின்னால் வந்த லாரி மோதியதில் 6 ஆண்களும் 6 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்வபம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல் கண்காணிப்பாளர் மிருதுள் கச்சாவா நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவருக்கு ரூ.50,000 வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

The post ராஜஸ்தானில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலி.. 15 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Jaipur-Agra highway ,Bharatpur district ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...