
சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்திக்கிற இயக்கம் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர்,
சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தோம்:
சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் இயற்றியது திமுக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தது திமுக அரசு என குறிப்பிட்டார். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என மணமக்களுக்கு அறிவுறுத்தினார்.
மக்களை பற்றி சிந்திக்கிற இயக்கம் திமுக:
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி கவலைப்படும் கட்சி தான் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு தொடர்ச்சியான வெற்றியை தந்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம் என குறிப்பிட்டார்.
99% வாக்குறுதிகள் நிறைவேற்றம்:
தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 100க்கு 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு சதவீத தேர்தல் வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்படும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வது திமுகதான். மகளிர் உரிமை தொகை திட்டம் மட்டுமன்றி, விடியல் திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்கப் போகிறேன். ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர் என முதலமைச்சர் கூறினார்.
பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டனர்:
நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா, முன்கூட்டியே நடக்குமா என பேச்சு எழுகிறது. எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் அதில் வெல்லப்போவது திமுக தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். தற்போது நடந்த இடைத்தேர்தல்களில் கூட இந்தியா கூட்டணிதான் கணிசமாக வெற்றி பெற்றுள்ளது. நடந்த இடைத்தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர் என்பதை காட்டுகிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் நாம் இந்தியாவை காப்பாற்ற முடியும் என முதலமைச்சர் கூறினார்.
The post 99% வாக்குறுதிகள் நிறைவேற்றம்: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வது திமுக தான்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.