×

கர்நாடக அமைச்சரின் கருத்தை அரசு ஒரு போதும் ஏற்காது.. உச்சநீதிமன்றத்தில் வாதாடி காவிரி நீரை பெறுவோம் : அமைச்சர் துரைமுருகன்

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வாதாடி தமிழகத்திற்குரிய காவிரி நீரை பெறுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், மழையளவு குறைந்து இருப்பினும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு சிடபிள்யுஆர்சி மற்றும் சிடபிள்யுஎம்ஏ ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரின் அளவை குறைபாடு விகிதாசாரத்தின் படி கணக்கிட்டாலும், அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவை விடக் குறைவாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை உத்தரவிட்டு வருகின்றன. அதையும் அளிக்க கர்நாடகா மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேற்று கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம்.சி. ஆகும். இந்நிலையில் சிடபிள்யுஆர்சி கர்நாடக அணைகளில் இருந்து இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5000 கன அடி வீதம் 6.48 டி.எம்.சி நீர் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது பற்றாக்குறை விகிதாச்சாரப்படி பார்த்தாலும் மிகக் குறைவு தான். இதையும் கர்நாடக அரசு அளிக்க முடியாது என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.

உச்சநீதிமன்ற ஆணையின்படி ஒரு ஆண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு 6.75 டி.எம்.சி மட்டுமே. குடிநீர் பயன்பாட்டிற்கு பிறகு காவிரி படுகையில் கர்நாடகா திரும்ப அளிக்க வேண்டிய நீர் 27 டி.எம்.சி ஆகும். நிலைமை இவ்வாறு இருக்க, குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலே ஆகும்.

இவ்வாறு, ஒரு மூத்த கர்நாடக அமைச்சர் இருமாநில விவசாயிகளின் நலன்களை கருதாமல் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்னை குறித்து எடுத்துரைத்து, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கர்நாடக அமைச்சரின் கருத்தை அரசு ஒரு போதும் ஏற்காது.. உச்சநீதிமன்றத்தில் வாதாடி காவிரி நீரை பெறுவோம் : அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Supreme Court ,Minister ,Thuraymurugan ,Chennai ,Duraymurugan ,Wadadadadi ,Tamil Nadu ,Tamil ,Nadu ,Water Resources ,Durimurugan ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி