×

சென்னையில் நர்சிங் மாணவி தற்கொலை விஷம் குடித்த அமமுக கவுன்சிலரை ஜி.ஹெச்சிலேயே கைது செய்த காவல்துறை

விழுப்புரம், செப். 13: சென்னை நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் அமமுக கவுன்சிலரை மருத்துவமனையிலேயே போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே வளவனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகள் முத்துலட்சுமி (18). சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2022ம் ஆண்டில், வளவனூர் பேரூர் அமமுக நகர செயலாளரும், 11வது வார்டு கவுன்சிலருமான கந்தன் (40) என்பவருடைய பாத்திரக்கடையில் பணிபுரிந்தார். அப்போது அவர், அம்மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தவறாக பழகி வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், அம்மாணவியை சென்னை சூளைமேட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து நர்சிங் படிக்க சேர்த்துள்ளனர். ஆனாலும் கந்தன், முத்துலட்சுமியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி, தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிரிழந்தார். இதுகுறித்து சென்னை சூளைமேடு போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மரணத்துக்கு காரணமான கந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வளவனூரில் சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே கந்தனின் உறவினர் விஜயன் என்பவர், கந்தன் தூண்டுதலின் பேரில் மாணவியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரது பெற்றோரிடம், கந்தன் மீது போலீசில் புகார் ஏதும் கொடுக்கக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து முத்துலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கந்தன், விஜயன் ஆகிய 2 பேர் மீதும், மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொதுமக்கள் போராட்டத்தின் போது கந்தன் விஷம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.
தற்ேபாது சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறியதாக டாக்டர்கள் கூறிய நிலையில் நேற்று அதிகாலையில் மருத்துவமனையிலேயே வளவனூர் காவல்நிலைய போலீசார், கந்தனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post சென்னையில் நர்சிங் மாணவி தற்கொலை விஷம் குடித்த அமமுக கவுன்சிலரை ஜி.ஹெச்சிலேயே கைது செய்த காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hechele ,Viluppuram ,Chennai Nursing College ,G.M. ,
× RELATED டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ்...