×

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேன் டிரைவர் கைது

வளசரவாக்கம்: சென்னை அண்ணாநகரை சேர்ந்த சுமதி (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘‘பள்ளியில் படித்து வரும் எனது 9 வயது மகள், ஒரு வாரமாக சோர்வாக காணப்பட்டாள். இதுபற்றி கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. இதனால், சந்தேகம் ஏற்பட்டு, நைசாக பேச்சு கொடுத்தபோது, ‘‘தினமும் பள்ளிக்கு வேனில் அழைத்து செல்லும் வேன் டிரைவர், யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுக்கிறார்,’’ என கூறினாள்.

இதனால், அதிர்ச்சியடைந்து, நேற்று முன்தினம் மதியம் எனது மகள் படித்து வரும் பள்ளிக்கு சென்று, எனது மகள் சென்று வரும் வேனின் பின்புறம் மறைவாக நின்று கொண்டு கண்காணித்தேன். சிறிது நேரத்தில், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு எனது மகள் உள்ளிட்ட சில சிறுமிகள் வேனில் ஏறி அமர்ந்தனர். அவர்களது அருகில் வந்த வேன் டிரைவர், நைசாக பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்தார். உடனே அதை எனது செல்போனில் வீடியோ எடுத்தேன். பின்னர், டிரைவரின் அருகில் சென்றேன். என்னை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

எனவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதையடுத்து, வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம், வில்லிவாக்கம் குழந்தைகள் நல அதிகாரி ஜோஸ்பின் மற்றும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தினர். இதில் அவர், சென்னை பாடி பகுதியை சேர்ந்த ரமேஷ் (48) என்பது தெரியவந்தது. போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்த போலீசார், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேன் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sumathi ,Annagar, Chennai ,All Women's police station ,Thirumangalam ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா