
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் உயர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. சென்னை மதுரவாயலில் கடந்த வாரம்4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி விட்டான். இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஒவ்வொரு பகுதியிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம் டெங்கு வேகமாக பரவுவதால் கொசு ஒழிப்பு பணியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் நோய்தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
டெங்கு கொசு ஒழிப்பில் கூடுதல் கவனம், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. செப்.16-ல் மருத்துவ கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. மருத்துவத்துறை இணை இயக்குநர்களுடனான ஆலோசனை ஓமந்தூரார் மருத்துவமனையில் செப்.16-ல் நடைபெறுகிறது.
The post தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.