×

பிரபல ரவுடி கொலையில் திடுக் தகவல் அண்ணனை கொன்றதால் ரவுடிகளை ஸ்கெட்ச் போட்டு கொன்ற தம்பி

புதுச்சேரி, செப். 12: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த பிரபல ரவுடி மணிமாறன் (எ) டூம் மணி (35) என்பவரை கடந்த 8ம் தேதி காலை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. மடுகரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தீவனூர் அருகே 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், நெட்டப்பாக்கம் சூரமங்கலம் மேட்டுத்தெருவை சேர்ந்த சிவராஜ் (22), சூரமங்கலம் பேட் கல்யாண மண்டபம் வீதியை சேர்ந்த வினோதன் (29), டிநகர் ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தர்மதுரை (22), வாணரப்பேட்டை கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த விஸ்டம், ரெயின்போ நகரை சேர்ந்த சங்கர் (28) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ரவுடி சோழன் தலைமையிலான கும்பல் கடந்த 2019ம் ஆண்டு அன்புரஜினியை கொலை செய்தது. இதனால் அவரது தம்பி ஜெரிக்கோ, தனது அண்ணன் கொலையில் தொடர்புடையவர்களை பழிதீர்த்து வருகிறார். அதன்படி, அன்புரஜினி கொலையில் தொடர்புடைய ஜெரோம் பிரபு அனிச்சக்குப்பத்தை சேர்ந்த விமல் (35) ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஜாமீனில் வெளியே வந்த டூம் மணியை ெகாலை செய்யப்பட்டார்.

மேலும், பிரான்சில் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மர்ஷல் என்பவர் அன்புரஜினியின் தீவிர ஆதரவாளர், அவருடன் தான் அன்புரஜினியின் தம்பி ஜெரிக்கோ வசித்து வருகிறார். பிரான்சில் இருந்து கொண்டு அன்புரஜினி கொலையில் தொடர்புடையவர்களை ஒவ்வொருவராக கொல்ல மர்ஷல்தான் நிதியுதவி அளித்து வருகிறார். அவர் கொடுத்த நிதியுதவி மூலம் தான் டூம் மணியை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தோம், மேலும் சாரம் பகுதியை சேர்ந்த உஷா என்கிற இளவரசி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்து சப்ளை செய்தார். இவ்வாறு அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, போலீசார் இந்த கொலை வழக்கில் ஜெரிக்கோ, மர்ஷல், இளவரசி ஆகியோரையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இளவரசியை கைது செய்த போலீசார் பிரான்சில் இருந்து மற்ற இருவரையும் புதுவை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

The post பிரபல ரவுடி கொலையில் திடுக் தகவல் அண்ணனை கொன்றதால் ரவுடிகளை ஸ்கெட்ச் போட்டு கொன்ற தம்பி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Muthyalbate ,Rawudi Maniwaran ,Solainagar ,Sevilla ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு