×

வெளிநாட்டில் இல்லாத நிறுவனங்களில் ரூ.600 கோடி முறைகேடு சிவசங்கரனுக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: ‘‘விதிகளுக்கு முரணாக கடன் கொடுத்து ரூ. 600 கோடி வங்கி மோசடி செய்தது தொடர்பாக ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய முடியாது’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், தற்போது அதிகாரிகள் மீதான வழக்கையும் தள்ளுபடி செய்ய மறுத்து உத்தரவிட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி, பின்லாந்து நாட்டை சேர்ந்த வின் விண்டோய் என்ற நிறுவனத்துக்கு ரூ.322.40 கோடியை கடந்த 2010ல் கடனாக கொடுத்தது. இதேபோல் அஸ்செல் சன்சைன் என்ற நிறுவனத்துக்கும் இந்த வங்கி ரூ.393 கோடி கடன் கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட கடன் செயல்படாத சொத்துக்கள் (வராக்கடன்) என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் ஐடிபிஐ வங்கிக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இந்த மோசடியில் தொடர்புடைய தொழிலதிபர் சி.சிவசங்கரனை தேடி வந்தனர். அவர் மீது கம்பெனி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ரிசர்வ் வங்கி விதிகளை மீறி தொழிலதிபர் சிவசங்கரனின் ‘‘சிவா கு ஆப் கம்பெனி’’ உத்தரவாதத்தின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுக்க உதவியாக இருந்த ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு 600 கோடி ரூ.ாய் இழப்பு ஏற்படுத்தியதாக சிவா இண்டஸ்டிரிஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் உள்ளிட்ட 10 நிறுவனங்கள், வங்கி அதிகாரிகள் உள்பட 29 நபர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், வங்கி அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிவசங்கரன் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். இதையடுத்து, அவரை கண்டுபிடிப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018 ஆகஸ்ட் 6ம் தேதி சிவசங்கரனை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவர் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அவர் வெளிநாடு செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

சிவசங்கரன் 2019 ஜனவரி 27ல் இத்தாலி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகவே அவருக்கு மீண்டும் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து சிவசங்கரன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, மேல் முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பணி தொடர்பாக வெளிநாடு சென்றுவர குறுகிய காலத்திற்கு அனுமதி அளிக்க கோரி சிவசங்கரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கடுமையான பொருளாதார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் மனுதாரர் வெளிநாட்டுக்கு சென்றால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். இந்த வழக்கில் பெரிய அளவில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது. என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வங்கி அதிகாரிகள் ராகவன், பாலகிருஷ்ண பாத்ரா, மேல்வின் ஓஸ்வாலட் ரேகோ, பிஜூ ஜார்ஜ், மனோஜ் அலெக்ஸ், வெங்கடகிருஷ்ணன், சுப்ரட்டோ குப்தா, வினெய் குமார், ரவீந்திரநாத், சந்தான குமார், ரவி, நினாட் பால்சந்த், சீனிவாசன் கோதண்டராமன், ராஜ் குமார் பன்சால் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஒன்றிய அரசு அனுமதி வழங்காவிட்டாலும், அதற்காக இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை அந்த நிறுவனங்கள் திரும்ப செலுத்தாததை ஏற்கமுடியாது. இதன் மூலம் ஐடிபிஐ வங்கிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மனுதாரர்கள் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிய கடனை அந்நிறுவனங்கள் திரும்ப செலுத்தாததை ஏற்கமுடியாது.

The post வெளிநாட்டில் இல்லாத நிறுவனங்களில் ரூ.600 கோடி முறைகேடு சிவசங்கரனுக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sivasankaran ,Chennai ,I.R.H.C. ,GI ,iCourt ,Dinakaran ,
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து