×

2வது சீசனையொட்டி இம்மாத இறுதியில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்

ஊட்டி: இரண்டாவது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் இம்மாதம் இறுதியில் மலர் அலங்காரம் மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவ்விரு சீசனின் போதும் தாவரவியல் பூங்காவில் புதிதாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

அதேபோல் பல்லாயிரம் மலர் தொட்டிகளில் புதிதாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.2வது சீசனுக்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டது. அதேபோல் 12,000 தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேரி கோல்ட், டெய்சி, டேலியா, சால்வியா உட்பட 40-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது டெய்சி மற்றும் சால்வியா மலர் செடிகளில் மலர்கள் பூத்துள்ளன.

பொதுவாக சுற்றுலா பயணிகள் பார்வைக்காக செப்டம்பர் மாதம் 2வது வாரத்திற்கு மேல் செடிகளை கொண்டு மாடங்களில் அலங்காரம் பணிகள் மேற்கொள்ளப்படும்.ஆனால் இம்முறை இன்னும் ஒரு சில செடிகளில் மலர்கள் பூக்காமல் உள்ளது. இதனால் இம்மாதம் இறுதி வாரத்தில் மலர் அலங்காரம் மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே ஆயுத பூஜை விடுமுறை மற்றும் அடுத்த மாதம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை காண வாய்ப்பு உள்ளது. தற்போது நாள்தோறும் இந்த மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மற்றும் உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

The post 2வது சீசனையொட்டி இம்மாத இறுதியில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Feedi Botanical Park ,Feeder ,Feeder Botanical Park ,Dinakaran ,
× RELATED சின்கோனா மூலிகை தாவரங்கள்...