கடத்தூர், செப்.11: தென்கரைக்கோட்டையில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதல்வர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து திமுகவினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைக்கோட்டையில், மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் மாயகண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தஞ்சை கரிகாலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது, முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து திமுக மேற்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தனேந்தின் மற்றும் நிர்வாகிகள் லியாகத், சங்கர், நாசர், சீனிவாசன் உள்ளிட்டோர் நாம் தமிழர் கட்சியினரிடம் சென்று தடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஏ.பள்ளிபட்டி-மொரப்பூர் சாலையில் திரண்ட திமுகவினர், நாம் தமிழர் கட்சியினரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. கோபிநாதம்பட்டி போலீசார் இரு கட்சியினரையும் சமரசப்படுத்தினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
The post முதல்வரை அவதூறாக பேசியதால் திமுகவினர் திடீர் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.