பெரியகுளம், செப்.11: தொடர் மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் அறுவடை பணிகள் மழைப் பொழிவு நின்றதால் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இரண்டாம் போக நெல் சாகுபடியில் மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சுற்றி உள்ள பகுதியில் 5000க்கும் மேற்பட்ட ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் கோவை 43 மற்றும் 45, ஆடுதுறை 39, 45, என்.எல்.ஆர், ஐ.ஆர் 20, நெல்லூர் 449 உள்ளிட்ட ரக நெல்லை விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர்.
கோடை காலத்தில் நல்ல மழை பெய்ததால் குளங்களில் நீர் நிறைந்தது. குளத்து நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட இரண்டாம் போக நெல் சாகுபடி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பாக அறுவடை பணிகளை துவக்கிய நிலையில், தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்ததால் அறுவடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக மழைப் பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில், விவசாயிகள் மீண்டும் மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு இரண்டாம் போக நெல் சாகுபடியில் ஏக்கர் ஒன்றுக்கு 35 முதல் 40 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post பெரியகுளம் கிராமங்களில் நெல் அறுவடை பணி மீண்டும் துவக்கம்: மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.
