×

ஹிட்லர் போன்று சர்வாதிகாரியாக செயல்பட்டால் இந்தியா சுக்குநூறாகிவிடும்: வைகோ பேச்சு

சென்னை: ஹிட்லர் போன்று சர்வாதிகாரியாக செயல்பட்டால் இந்தியா சுக்குநூறாக நொறுங்கிவிடும் என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் வைகோ பேசினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திருவிக நகர் தெற்கு பகுதி திமுக சார்பில் ஓட்டேரி ஐந்து விளக்கு பகுதியில், தெற்கு பகுதிச் செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் ‘தமிழன் உயர குரல் கொடுத்தவர், தாய்போல் கலைஞர் அரவணைத்தவர்’ என்னும் பெயரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இதில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வைகோ பேசியதாவது: வடஇந்திய பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் ஒருபோதும் தமிழ்நாட்டில் கால் வைத்ததில்லை, ஆனால் தமிழ்நாட்டு அரசர்கள் கங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளனர். மலேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளை கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள்.

பாரதம் என சனாதனத்தை நிலை நிறுத்தினால், இந்தியா துண்டு துண்டாகப் போய்விடும் என்பதை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியா என்பது ஒரு நாடல்ல, அது மாநிலங்களால் இணைத்த ஒன்றியம். மாமன்னன் அசோகன் காலத்திலும் இந்தியா ஒன்றாக இல்லை. சக்கரவர்த்தி அக்பர் காலத்திலும் இந்தியா ஒன்றாக இல்லை. பிரிட்டிஷ் காலத்தில் பலதரப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு இந்தியாவை ஒன்றியமாக உருவாக்கினார்கள். இன்று பாரத் என்று சொல்ல ஆரம்பித்து ஹிட்லர், முசோலினி போன்று சர்வாதிகாரிகளாக இவர்கள் செயல்பட்டால் இந்தியா சுக்குநூறாக நொறுங்கிவிடும். இவ்வாறு வைகோ பேசினார்.

The post ஹிட்லர் போன்று சர்வாதிகாரியாக செயல்பட்டால் இந்தியா சுக்குநூறாகிவிடும்: வைகோ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Hitler ,India ,Vaigo ,CHENNAI ,Vaiko ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!