×

மதுரவாயலில் பரபரப்பு டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு: சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

சென்னை: மதுரவாயலில், டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்தான். மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர், உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (37). இவரது மனைவி சோனியா (30). இவர்களுக்கு ரக்சன் (4) என்ற மகனும், 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ரக்சனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவனை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 6ம்தேதி சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்‌.

மேலும், சிறுவனின் சடலத்துடன் நேற்று மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல் செய்வதற்காக சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புறப்பட்டனர். தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்ய வந்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் குடிநீர் வசதி கிடையாது. மாநகராட்சி லாரிகளில் வந்துதான் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். அதனால் குடிநீரை பிடித்து வைத்து பல நாட்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

இதன் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் மற்றும் தொற்று நோய் இந்த பகுதியில் உள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீர் வசதி செய்து தர வேண்டும், கழிவு நீர் தேங்காதவாறு அகற்றுவதற்கும் பலமுறை புகார் கொடுத்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர். மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாகவே ரக்சன் உயிரிழந்து விட்டான். இதுபோன்று வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாங்கள் சாலை மறியலில் ஈடுபட வந்தோம்,’’ என்றனர். இதையடுத்து, அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post மதுரவாயலில் பரபரப்பு டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு: சடலத்துடன் உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Chennai ,Maduravayal riots ,
× RELATED மதுரவாயல் அருகே கூரியர் அலுவலகத்தில் தீ விபத்து