
நாகப்பட்டினம்: நாகை புதிய பஸ் நிலையத்தில் மார்த்தாண்டம் செல்வதற்காக அரசு விரைவு பஸ் நேற்று நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35 வயதுடைய ஒருவர் ஏறினார். பல சீட்கள் காலியாக இருந்தும் அதில் அவர் அமரவில்லை. ஜன்னலோர சீட்டுக்காக சிலரை இடமாற்றி உட்காருங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் யாரும் எழுந்திரிக்கவில்லை. இதனால் அவர் பஸ்சில் நின்று கொண்டே இருந்தார். ஒன்று உட்காருங்கள், இல்லையென்றால் பஸ்சை விட்டு இறங்குங்கள் என்று கண்டக்டர் கூறினார். இதற்கு, இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்சா. அரசு பஸ்சிலிருந்து கீழே இறங்க சொல்ல நீ யார் என்று கேட்டு அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
கீழே இறங்காவிட்டால் போலீசை கூப்பிடுவோம் என்று டிரைவர் வந்து கூறினார். போலீஸ் வந்தா பயந்து விடுவோமா, உனக்கு தைரியம் இருந்தால் போலீசை கூப்பிடு என்று அவரிடமும் அந்த நபர் தகராறில் ஈடுபட்டார். இவரது ரவுசு தாங்க முடியாமல் கண்டக்டர், வெளிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அவரை பஸ்சை விட்டு கீழே இறக்கி விசாரித்தனர். இதில் அவர், நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பதும், ஃபுல் போதையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் சவுந்தரராஜனை ஏற்ற முயன்றனர்.
ஆனால் அவர் ஆட்டோவில் ஏற மறுத்து, ஆட்டோவின் பக்கவாட்டில் இருந்த ரெக்சின் சீட்டை கிழித்தார். இதனால் ஆளை விட்டா போதும் என டிரைவர் ஆட்டோவை எடுத்துச்சென்று விட்டார். பின்னர் வேறுவழியின்றி 2 போலீசார் சவுந்தரராஜனை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு 100 மீ தொலைவில் உள்ள வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காவல் நிலையத்திலும் போலீசாரிடம் சவுந்தர்ராஜன் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து போதையில் பயணிகளுக்கு இடையூறு செய்ததாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்தனர். பின்னர் உறவினர்களை வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.
The post அரசு பஸ்சில் ரவுசு காட்டிய போதை ஆசாமி; ஆட்டோவில் ஏற்ற மறுத்து டிரைவர் ஓட்டம் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்: நாகையில் பரபரப்பு appeared first on Dinakaran.