
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பொறியியல் பட்டதாரி பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள 15 பி மேட்டுப்பட்டி வெள்ளைநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லபாண்டியன். இவரது மகன் அஜித்பாண்டியன் (26). பொறியியல் பட்டதாரியான அஜித்பாண்டியன் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சுடுகாடு அருகே கட்டியிருந்த காளையை அவிழ்த்து வேறு இடத்தில் மாற்றி கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக அஜித்பாண்டியனை காளை முட்டியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜித்பாண்டியனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜல்லிக்கட்டு காளை முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி வாலிபர் பலி appeared first on Dinakaran.