×

சேலம் அருகே பரிதாபம்: குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

சேலம்: சேலம் அருகே செங்கல்சூளை குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் இறந்தனர்.
சேலத்தை அருகே உள்ள செங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (40) லாரி டிரைவர். இவரது மகன்கள் பத்மகுமார்(12), ஸ்ரீதர் (8), கிரிவாசன்(3). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்மகுமார் 6ம் வகுப்பும், ஸ்ரீதர் 3ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், 3 சிறுவர்களும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். மதிய வேளையில், மூவரும் அருகில் உள்ள தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளைக்கு சென்றுள்ளனர்.

அங்கு செங்கல் தயாரிப்பு பணிக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, 6 அடி ஆழத்தில் வெட்டி வைக்கப்பட்டுள்ள குட்டையில் சிறுவர்கள் பத்மகுமார், ஸ்ரீதர் ஆகியோர் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, ஆழத்தில் இருவரும் மூழ்கினர். இதனை பார்த்த கடைசி தம்பி கிரிவாசன், அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று கூறியுள்ளான். உடனே அக்கம் பக்கத்தினர் செங்கல்சூளைக்கு ஓடி வந்து, குட்டையில் மூழ்கிய சிறுவர்களை சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சிறுவர்களின் தாயார் புஷ்பா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்பகுதி மக்களும் அதிகளவில் திரண்டனர்.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அப்போது, அனுமதி ஏதுமின்றி செங்கல்சூளை நடத்தி வருவதோடு, தேவையின்றி குட்டை வெட்டி வைத்து, 2 சிறுவர்கள் சாவிற்கு காரணமான சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, சடலங்களை எடுக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சேலம் அருகே பரிதாபம்: குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி பலி appeared first on Dinakaran.

Tags : Pity ,Salem ,Chengatore ,Saletam ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை