×

புதிய நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.40 கோடி கடன் வாங்க முடிவு: இன்று நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அப்போது மறைந்த டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, மாரிமுத்து, நடிகை ‘அங்காடித்தெரு’ சிந்து உள்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதிய கட்டிடத்துக்கான பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளர் விஷால் பேசினர். அப்போது, நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்ட ரூ.40 கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம் குமார் உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் ஏராளமான நாடக கலைஞர்கள் கலந்துகொண்டனர். சங்க வளர்ச்சிப் பணிகள், புதிய கட்டிடப் பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயற்குழு கூட்டம் காலை 9 மணிக்கு நடந்தது. இதில் 23 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் நன்றி கூறினார். நடிகர் சங்க புதிய கட்டிட நிதிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விஷால் கூறுகையில், ‘தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகு எனது திருமணம் நடக்கும்’ என்றார்.

The post புதிய நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.40 கோடி கடன் வாங்க முடிவு: இன்று நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,67th General Meeting ,South Indian Actor Association ,T. GP Kajendran ,Mayilsamy ,Manopala ,Union ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...