புதுடெல்லி: ‘ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரே வணிக நிறுவனம்’ இதுதான் மோடியின் கொள்கை என காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது. டெல்லியில் நேற்று தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘ஒரு பூமி, ஒரு எதிர்காலம், ஒரு குடும்பம்‘ என முன்மொழியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டின் கருப்பொருளையும், அதானி விவகாரத்தில் மோடியின் நிலையையும் தொடர்புபடுத்தி காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் லலித் மோடி, நீரவ் மோடி, முகுல் சோக்சி, விஜய் மல்லையா இன்னும் நாடு கடத்தப்படவில்லை. பிரதமர் மோடி தன் நெருங்கிய நண்பரான அதானிக்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் மற்றும் சாலை துறைகளில் ஏகபோகங்களை உருவாக்க வெறுமனே உதவவில்லை.
மாறாக, செபி, சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் தீவிர பண மேசாடி விசாரணை அலுவலகம் ஆகியவை மூலம் அதானிக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு திட்டமிட்டு முட்டுக்கட்டை போட்டுள்ளார். இது விசாரணை அமைப்புகள் அதானிகளுக்கு எவ்வாறு அடிபணிந்தன என்பதற்கும், பெருநிறுவனங்களின் நண்பர் மோடி என்பதற்கும் சிறந்த உதாரணம். பிரதமர் மோடி ‘ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரே வணிக நிறுவனம்’ என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
The post ‘ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரே நிறுவனம்’ இதுதான் மோடி அரசின் கொள்கை: காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.