×

சென்னையில் மரணமடைந்த நடிகர் மாரிமுத்து உடல் சொந்த ஊரில் தகனம்

வருசநாடு: சென்னையில் டப்பிங் பேசும்போது மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் வருசநாடு அருகே பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (56). இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது மகன் அகிலன், மகள் ஐஸ்வர்யா. சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான மாரிமுத்து மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், 2 படங்களையும் இயக்கி உள்ளார்.சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

வடபழனியிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் நேற்று காலை மாரிமுத்து டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். சென்னையில் அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னையில் இருந்து ஆம்புலன்சில் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரி கிராமத்திற்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு கொண்டு வரப்பட்டது. மாரிமுத்துவின் தாயார் மாரியம்மாள் குடியிருந்து வரும் பூர்வீக வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மாரிமுத்துவின் உடலுக்கு உறவினர்கள், வருசநாடு, சிங்கராஜபுரம், மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் மாரிமுத்துவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயானத்தில் இறுச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. மாரிமுத்துவின் மரணத்தால் பசுமலைத்தேரி கிராமம் மட்டுமல்லாமல் தேனி மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

The post சென்னையில் மரணமடைந்த நடிகர் மாரிமுத்து உடல் சொந்த ஊரில் தகனம் appeared first on Dinakaran.

Tags : Marimuthu ,Chennai ,Daganam ,Varasanadu ,Honey District ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது